Saturday, August 13, 2011

மஹதி பிறந்தாள்

13 Aug 2011

அன்புள்ள கிரிஜா,

2008 அக்டோபர் மாதத்தில், ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்தது.சுபா இரண்டாவது குழந்தைக்கு தாயாக போகிறாள் என்பதே அது.நீ இருந்திருந்தால், எவ்வளவு மகிழ்ச்சியடைந்திருப்பாய் ? எனது சந்தோஷத்தின் நடுவே கவலையும் வந்தது. அவளை எப்படி பார்த்துக்கொள்ள போகிறேன்,அவள் ப்ரசவம் நல்ல முறையில் நடந்து அவளையும், குழந்தையையும் நல்லபடியாக மகேஷிடம் ஒப்படைக்கவேண்டுமே , என்று.

நீ என்னுடன் இல்லாத குறை அன்று மீண்டும் பூதாகாரமாக தெரிந்தது. இருந்தாலும், நீ அவளை நல்ல முறையில் பார்த்துக்கொள்வாய் என்ற நம்பிக்கையும் இருந்தது. உன் இடத்தில் சுதா இருந்து கொண்டு,எனக்கு தைரியம் சொன்னாள். நான் இருக்கிறேன், கவலைபடாதே அப்பா என்று.அதே மாதிரி சுபாவை, ஒரு தாய் மாதிரி பார்த்துக்கொண்டாள்,ப்ரசவத்திற்கு முன்னாலும்,பின்னாலும்.

நீ இல்லாத குறை சுபாவிற்கும் நிறைய இருந்திருக்கும்.ஆனால். அவளும்,அதை வெளியில் காட்டி கொள்ளாமல்,தைரியமாக இருந்தாள்.

2009 மே வரை பூனாவிலேயே இருந்தாள். நானும் அவளுடன் இருந்து, என்னாலான சிறு உதவிகளை செய்து தந்தேன்.2009 ஜூன் மாதம், சென்னைக்கு வந்தாள். சுதாவிற்கு ப்ரசவம் பார்த்த டாக்டர் சரோஜா ராமனாதன் தான், சுபாவிற்கும் பார்த்தாள். சென்னை வந்ததும் செக் அப் செய்து, எல்லாம் நார்மலாக இருப்பதாக கூறினார்.ஜூலை 10ம் தேதிக்குள் குழந்தை பிறக்கும் என்றும் சொன்னார்.

ஜூன் கடைசியில், செக் அப் செய்துவிட்டு, குழந்தை பூரண வளர்ச்சி பெற்றுவிட்டது, ஆனால்,சிசேரியன் தான் செய்ய வேண்டும், எனவே ஒரு நல்ல நாள் பார்த்து, hospital ல் அட்மிட் ஆகி விடும்படி கூறினார். அதன்படி, ஜூலை 4ம் தேதி-சனிக்கிழமை- நல்ல நாளாக இருந்ததால், அன்று காலை நான், சுதா, மகேஷ், சந்தர் அவளை கூட்டிசென்று, மைலாப்பூர் இசபல் ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்தோம். பிற்பகல் 1250 க்கு அவளுக்கு, சுக ப்ரசவம் ஆகி, ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தாள்.

பேத்தி பிறந்த சந்தோஷமும்,அவளை பார்க்க நீ இல்லையே என்ற வருத்தமும் ஒரு சேர வந்து,அழுதேன். எல்லோரும், நீயே வந்து பிறந்திருக்கிறாய் என்று சொன்னார்கள். அப்படியா கிரிஜா ? குழந்தை பார்க்க அழகாக இருந்தாள்.

5ம் நாள் சுபா, குழந்தை ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்தார்கள். 11ம் நாள் புண்யாகவாசனம் நம் வீட்டில் சிறப்பாக நடைபெற்றது.வழக்கம் போலவே, நம் உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் வந்திருந்து சுபா , குழந்தையை ஆசிர்வாதம் செய்தார்கள்.

குழந்தைக்கு, சீதாலஷ்மி, மஹதி என்று பெயர் வைத்து இருக்கிறோம். குழந்தைக்கு நாய் காசு, தாயத்து செய்து போட்டேன்.குழந்தையை கொண்டு விடும் போது Gold Chain வாங்கி போட்டேன்.கடவுள் அருளால், குழந்தை எல்லா வளமும் பெற்று வாழ வேண்டும்.

ஆகஸ்டு மாத கடைசியில் சுபா குழந்தையை, மகேஷின் அண்ணா குமார் வீட்டில் சுதா சந்தர் கொண்டு விட்டனர். ( எனக்கு ஆபரேஷன் நடந்து இருந்ததால், நான் போக முடியவில்லை ).

ப்ரசவத்திற்கு உதவிக்காக, ரமணாவும், சாவித்திரியும் வந்திருந்து சுதாவிற்கு துணையாக இருந்து சுபாவையும், குழந்தையையும்,வீட்டையும் பார்த்துக்கொண்டார்கள். அவர்களுக்கு நன்றி.

கடவுள் கிருபையாலும் உன் ஆசியாலும், ஒரு முக்கிய கடமை நல்லவிதமாக முடிந்தது.
நன்றி.

மீண்டும் சந்திப்போம்,

உன் அன்புள்ள

சுகவனம்

Tuesday, July 5, 2011

ஆப்தீக காரியங்கள் -டிச10-டிச14,2008

13 ஆகஸ்டு 11

அன்புள்ள கிரிஜா,

நீ கடவுளிடம் சென்று ஒரு வருடம் ஆன பிறகு உன் ஆத்மாவிற்கு செய்யவேண்டிய ஆப்தீக காரியங்களை 2008 டிசம்பர் 10,12,13,14 தேதிகளில் சிரத்தையாக செய்தேன்.

டிச 10ம் தேதி, ஊன மாஸிகம்- சுதா fly, சுபா fly, சாவித்ரி கலந்து கொண்டார்கள்.1015மணிக்கு ஆரம்பித்து 1115 க்கு முடிந்தது.

டிச 12ம் தேதி ஆப்தீக ஸோதகும்பம் - சுதா fly, சுபா fly, சாவித்ரி கூட , சரோஜா,ராஜப்பா, மன்னியும் கலந்து கொண்டு,சமையலிலும் உதவி செய்தார்கள். 10 மணிக்கு ஆரம்பித்து 1045 க்கு முடிந்தது. எல்லோரும் சாப்பிட்டு முடிக்க 1 மணி ஆகி விட்டது.

டிச 13ம் தேதி சிரார்தம் நல்ல முறையில் நடைபெற்று முடிந்தது. 12ம் தேதி கலந்து கொண்டவர்களே இன்றும் இருந்தார்கள்.1045 க்கு ஆரம்பித்து, 1145 க்கு முடிந்தது. உன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை ப்ராத்திக்கிறேன்.

இந்த 3 நாட்களும் ஹோமம் இல்லாததால், தினமும் கிட்டதட்ட 1 மணி நேரத்தில் காரியங்கள் முடிந்து விட்டன.

டிச 14ம் தேதி கிரேக்கியம்.நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும், சுமார் 50 பேர் கலந்து கொண்டனர். நவக்கிரஹ ஹோமமும், பூஜையும் செய்தோம். 10 மணிக்கு ஆரம்பித்து, 1145 க்கு முடிந்தது.

இந்த 4 நாட்களும், சமையலில் உதவி செய்த சரோஜா, சாவித்ரி, விஜயா மன்னிக்கு நன்றிகள் பல. சுதா , சுபா எல்லா வேலைகளையும் , மிக சிரத்தையாக செய்தார்கள். அவர்களுக்கு,உன் ஸ்பெஷல் ஆசிர்வாதங்கள் கிடைத்திருக்கும்.

மீண்டும் சந்திப்போம்....

உன் சுகவனம்

Friday, July 1, 2011

உறவுகளின் பிரிவு

4th July 2011

அன்புள்ள கிரிஜா

2007 நவம்பர் 25ம் தேதி. கடவுள் உன்னை தன்னிடம் கூப்பிட்டுகொண்டாரே, அந்த நாளிற்கு பிறகு அவர் நம்முடைய இன்னும் சில சொந்தங்களை அழைத்து கொண்டுவிட்டார்

முதலில், 2008 ஏப்ரல் 25ம்தேதி, மகேஷின் அப்பா. 23ம் தேதி Heart Attack வந்தது. உடம்பு தேறி வரும் சமயம்,25ம் தேதி 2nd Attack வந்து,அவர் எங்களை விட்டு பிரிந்தார்.

பிறகு, அதே வருடம் நவம்பர் 20ம் தேதி நம் KVS அத்திம்பேர் திடீரென உயிர் நீத்தார். 18ம் தேதி நான் அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். நிறைய விஷயங்களை பற்றி நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். என்ன செய்வது? 20ம் தேதி காலை உடம்பு முடியவில்லை.1 மணி நேரத்திற்குள் எல்லாம் முடிந்து விட்டது.

2009 ஆகஸ்டு 1ம் தேதி நம் பெரிய மன்னி டில்லியில் காலமானார். அதற்கு முன் சுமார் 15 நாட்கள் உடம்பு முடியாமல் ஆஸ்பத்திரியில் இருந்தார்.சிகிச்சை பலனளிக்காமல்,அவர் உயிர் பிரிந்தது.

எல்லோருடைய ஈம சடங்குகளில் கலந்து கொண்டு குடும்பத்தினர் எல்லோருக்கும் என்னால் ஆன ஆறுதல்களை கூறி வந்தேன்.என்னால் வேறு என்ன செய்யமுடியும் , சொல்லு கிரிஜா.

இவர்களை தவிர இன்னும் சில உறவினர்களும் இந்த 4 வருடங்களில் மறைந்தனர்.

அங்கு நீ இவர்களை சந்தித்து,உரையாடி வருவாய் என நினைக்கிறேன்.எல்லோரையும் விஜாரித்ததாக சொல்.

அடுத்த கடிதத்தில் மீண்டும் சந்திப்போம்

உன் சுகவனம்

கிரிஜா, உன்னுடன் தொடர்பு கொள்ள ஒரு புது வழி



1 ஜூலை 2011

அன்புள்ளா கிரிஜா

நீ என்னை விட்டு பிரிந்த நாள் முதல், உன்னோடு பகிர்ந்துகொள்ள வேண்டிய தருணங்கள் நிறைய ஏற்பட்டுவிட்டன.ஆனால், நான் எப்பொதும் கற்பனையில் தான் உன்னோடு பேச முடிந்தது.இப்போது ஒரு யோசனை, நான் நினைப்பதை ப்ளாக் ல்,எழுதி வைத்தால் என்ன என்று .

நான் எப்போது எல்லாம் உன்னோடு பேச வேண்டும் என்று நினைக்கிறேனோ, அப்போது எல்லாம், இந்த ப்ளாக் மூலமாக உன்னோடு பேசுவேன். உனக்கு, இந்த விஷயங்கள் தெரிய வரும் என நம்புகிறேன்

இந்த ப்ளாக், நீ எங்களை விட்டு பிரிந்த பின் நம் குடும்பத்தில் நடந்த முக்கிய விஷயங்களை வரலாறாக பதிவு செய்யவும், நம் பேரன், பேத்தி மற்றும் அவர்கள் சந்ததியருக்கு ஒரு விஷய பொக்கிஷமாக இருக்கவும் உதவியாக இருக்கும்.

அவ்வப்போது உனக்கு இதன் மூலமாக லெட்டர் எழுதுகிறேன். காத்திருக்கவும்.

இப்படிக்கு உன் பிரியமுள்ள

சுகவனம்